மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - வல்லங்குளம் மாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள்
வல்லங்குளம் மாரியம்மன்
அம்பிகை கருணைக்கடல். அவள் எப்பொழுதும் நம்பியவரைக் கைவிட மாட்டாள். மனிதர்களாகப் பிறந்த நாம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறோம். அவதிப்படுகிறோம். ஜோஸ்யரிடம் சென்று நம் கஶ்டகாலங்களில் நிவர்த்திக்கு வழி தேடுகிறோம். அம்பிகையைச் சரணடைதலே சிறந்த வழி என்பது யாவருக்கும் புலப்படுவதில்லை.
பித்ரு தோஶமாகிய நம் முன்னோர்களின் சாபம், சரிவர திதி, தர்ப்பணம் செய்யாததால் ஏற்படும் இந்த தோஶத்திலிருந்து நிவர்த்தி அடைய உளுந்தாலான பலகாரங்களைச் செய்து அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கு விநியோகிக்க அம்மன் அருளும், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
இந்த கோயில் எங்குள்ளது? நாகப்பட்டினம் திருவாரூர் பாதையில் நாகையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. கீவளூர் பேருந்து நிலையத்திலிருந்து (கடைத்தெரு) சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிறு தோறும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோயிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை.
வல்லங்குளத்தில் இந்த மாரியம்மன் குடிகொண்டதே ஒரு சுவையான கதை.
வல்லாள மகாராஜா, திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வரலானார். இவருக்கு பிள்ளைப்பேறு இல்லை. பல யாகங்கள் செய்தார். அதன் பலனால் அரசி கருவுற்றாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய மன்னன், ஜோசியர் பேச்சைக் கேட்டு இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு என்று கூறியதை அறிந்து நாட்டு மக்களின் நலன் கருதி தன் மனைவியையும் குழந்தையையும் கொல்ல முடிவு செய்தார். விதி யாரை விட்டது?
ஒரு நாள் மனைவி உறங்கும் சமயம் பார்த்து அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார். அப்போது, ஆக்ரோஶமாக அங்கு தோன்றினாள் பேச்சாயி அம்மன். மன்னன் கையிலிருந்த வாளைப் பிடுங்கி அவனைத் தன் காலால் மிதித்தாள்.
மன்னன் மனைவிக்கு பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றினாள். மன்னன் மனம் வருந்தி அம்பிகையிடம் பாவ பரிகாரம் வேண்டினார். "கீவளூரில்” ஒரு குளம் வெட்டி பாவத்திற்குப் பரிகாரம் தேடிக் கொள் என்றாள் அம்பிகை. பிறகு 500-700 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் குளத்திலிருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர்.
அம்பிகைக்கு கோயில் கட்டி வல்லங்குளத்திலிருந்து வெளிப் பட்டதால் ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் எனப்பட்டாள். இவள் கருணையே வடிவானவளாகக் காட்சி அளிக்கிறாள். இத்திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பேச்சாயி அம்மன் மற்றும் ஐயனாரும் அம்மனை நோக்கி காவலாளிகளாக காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை