சிவ புராணம் - வேடன் பெற்ற அருள்
சிவ புராணம்
வேடன் பெற்ற அருள்
ஒரு சமயம் நாட்டிலே மிகுந்த வறட்சி உண்டாயிற்று. மக்கள் ஜீவனத்துக்கு வழி இன்றித் திண்டாடினர்.
அப்போது காட்டிலே வேட்டையாடி ஜீவித்து வந்த வேடன் ஒருவன், தன் மனைவியோடு பசியால் வருந்தியபடி திரிந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் தாமரைத்தடாகம் ஒன்றிருந்தது. அதில் பூத்திருந்த தாமரை மலர்களைக் கண்டதும், அவைகளைப் பறித்துக் கொண்டு பக்கத்திலிருந்த காசி நகரத்தை அடைந்தான்.
விதிவசத்தால் அன்றைய தினம் நகரம் முழுவதும் சுற்றியும் மலர்கள் விலை போகவில்லை. சுற்றிக்கொண்டு வரும்போது ஓங்காரேசுவரர் ஆலயத்துக்கு வந்தான். அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு, சுவாமி தரிசனத்துக்கு வருபவர் யாராவது மலர்களை வாங்கக்கூடும் என்று ஆலயத்தில் காத்துக் கிடந்தான். அங்கு நடைபெறும் பூஜையையும், மக்கள் பகவானிடம் காட்டிய பக்தியையும் கண்ட வேடன் சிவபெருமானிடம் பக்தி கொண்டான். மலர்களை விற்க மனமின்றி பகவானின் பாதங்களில் பக்தியோடு சமர்ப்பித்து விட்டு அன்றிரவு முழுவதும் பட்டினியோடு அங்கேயே இருந்து பூஜையைக் கண்டான். விடியற்காலை நேரத்தில் அவ்விருவருக்கும் பகவானின் திவ்விய தரிசனம் கிடைத்தது.
அதன் பின்னர் வேடன் அந்த ஆலயத்தை விட்டுப் போக மனமில்லாதவனாய் அங்கேயே இருந்து ஆலயத்தைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு உதவியாக அவன் மனைவியும் இருந்து வந்தாள்.
சிறிது காலத்துக்கெல்லாம் வேடன் இறந்து போனான். அவன் மனைவி அவனோடு உடன்கட்டையேறினாள்.
அடுத்த பிறவியில் அந்தத் தம்பதிகள் அரச குலத்தில் பிறந்து ஒன்றாக இணைந்தனர். அவனுக்கு முன் ஜன்ம புண்ணியத்தால் ஓங்காரேசுவரரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. காசிக்குச் சென்று ஓங்காரேசுவரரைத் தரிசித்து, பகவானைப் பிரத்தியக்ஷமாகத் தரிசிக்க விருப்பம் கொண்டு காற்றையே உணவாகப் புசித்துக் கடும் தவம் செய்தான். பகவானும் அவன் தவத்திற்கு மெச்சி அவனுக்குத் தரிசனம் அளித்தார். முன் ஜன்மத்தில் தாமரை மலர்களைச் சமர்ப்பித்ததால் அவனுக்குப் பொற்றாமரை மலர் ஒன்று கொடுத்தார். அதுவே அவனுக்கு வாகனமாகி நினைத்த இடத்துக்கு அவனை அழைத்துச் சென்றது. அதன் காரணமாக அவனுக்குப் புஷ்பவாகனன் என்ற பெயர் உண்டாயிற்று.
லாவண்யவதி என்ற தன் மனைவியோடு புஷ்பவாகனன் சகல லோகங்களையும் சுற்றி வரும்போது, பிரம்மதேவன் அவனைப் புஷ்கரதீபத்துக்கு அரசனாக்கி அங்கேயே இருந்து வருமாறு செய்தார். அரசனுக்குப் பதினாயிரம் பிள்ளைகள் பிறந்தன.
சகல சௌபாக்கியங்களுடன் ஆட்சி புரிந்துவம் சமயத்தில் ஒரு நாள் பிரசேதஸ முனிவர், புஷ்பவாகனின் அரண்மனைக்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்த புஷ்பவாகனன், அவர் மூலம் தன் முன் விருத்தாந்தங்களை அறிந்தான். தன்னை இந்நிலைக்குக் கொணர்ந்த ஓங்காரேசுவரரைத் தரிசிக்க விரும்பி பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு மனைவியுடன் புறப்பட்டான்.
காசியை அடைந்த அரசன் தேவாஹ்ருதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி ஓங்காரேசுவரரைத் தரிசித்தான். தன் ஆயுட்காலம் முழுவதும் அங்கேயே மனைவியுடன் தங்கியிருந்து பகவானின் பாதார விந்தங்களை அடைந்தான்.
இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை