திருவிளையாடல் புராணம் - வேலால் கடலைச் சிதைத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
வேலால் கடலைச் சிதைத்தல்
தந்தையைப் போலவே உக்கிர பாண்டியனும் நெறி தவறாத செங்கோல் செலுத்தினார். குடிமக்கள் அவரவர்க்கு உரிய தொழிலைச் செய்துகொண்டு சீரும் சிறப்புமாய் வாழ்ந்தனர். நாடெங்கும் கால்நடைகளும், பயிர் பச்சைகளும் செழித்தோங்கின. ஆறுகள் கோணலால் போயிற்றே அன்றி அந்த நாட்டு மக்கள் கோணற்புத்தியாய் நடந்தாரில்லை!
செடி, கொடி, மரங்கள் காலத்தில் பூத்து காய்த்தன. எங்கும் விழாக்கள், மகிழ்ச்சி! கோலாகலம்! மன்னன் தொண்ணூற்று ஆறு அசுவமேதயாகங்களை முடித்தான். தேவேந்திரன் இதுகண்டு பொறாமை கொண்டான். உடனே வருணனை அழைத்து ’பொங்கிப் பெருகி மதுரையை அழித்திடுக என்று ஆணை யிட்டான்.
கேட்க வேண்டுமா? இவ்வளவு போதாதா வருணனுக்கு! ஆலவாயின் மகிமையறியாமல் நடுநிசியில் மலைபோன்ற அலைகளுடன் கடலைக் குமுறுவது போல பொங்கச் செய்துவிட்டான்.
சுந்தரேசப்பெருமான் மகன் கனவில் தோன்றி மன்னா! தண்ணீர் ஊருக்குள் வந்துவிட்டது. மக்கள் தத்தளிப்பது தெரியாமல் உறங்கு கின்றாயே! நான் முன்னம் உனக்குத் தந்த வேலை, கடலை நோக்கி வீசி ஜனங்களைக் காப்பாற்று. இல்லையேல் தண்ணீர் மதுரையை அழித்துவிடும்" என எழுப்பி, திருநீறு பூசி மறைந்தார்.
ஈசனும் சித்தர் வடிவில் அரண்மனை வெளியில் காத்திருந்தார். உக்கிர பாண்டியன் கனவில் தந்தை உரைத்தபடி வேலை முழுமூச்சுடன் வீசி எறிய பெருகிவந்த நீர் கட்டுப்பட்டு வைகையில் சேர்ந்தது.
இவரும் மீனாக்ஷி ஆலயத்துள் ஒரு புதிய லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் சுந்தரலிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். சித்தர் வடிவத்தில் இருந்த ஈசன், வைகைக்கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ்வளர்ப்பாய்!" எனக்கூறி ஜோதி வடிவாய் லிங்கத்தில் கலந்தார்.
வேலால் தண்ணீரை அடக்கிய இந்தப் 13-ஆம் திருவிளை யாடலை படிப்பவருக்கும், கேட்பவருக்கும் நீரினால் ஏற்பட்ட கண்டங்கள் விலகும். பயிர்பச்சை செழிக்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும். காமம், குரோதம், லோபம், மோகம், மாற்சர்யம், கோபம் முதலான குணங்கள் கட்டுப்படும்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
கருத்துகள் இல்லை