மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - நாகலோக மாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
நாகலோக மாரியம்மன்
பாதாள லோகத்தை ஆண்டு வந்த நாகராஜனுக்கும் அவர் மனைவி நாக கன்னிகைக்கும் ஏழு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மாரியம்மனே மூத்தவள். அவளே உலகை துன்புறுத்தி வந்த மகிஶாசுரனை மாய்த்தாள். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவள் வேண்டும் வரம் யாதென கேட்க அவள் முத்துக்களை வரமாகப் பெற்றாள். அதனை சோதிக்க சிவபெருமான் மீதே வீச, சிவபெருமான் உடல் முழுதும் கொப்புளங்களால் பெரிதும் துன்புற்றார். பின்னர் அவரை வாழை இலையில் படுக்க வைத்து, அவளுடைய அண்ணன் கிருஶ்ணனின் துணையுடன் பிணி நீங்கச் செய்தாள். சிவபெருமானும் பின்னர் அவளுக்கு பல வரங்களை நல்கி ஆசீர்வதித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.
அது முதல் அவள் பூலோகம் வந்து கிராமங்களில் தங்கி அங்கு அவர்கள் கொடுக்கும் பூஜையினை ஏற்று அருள் புரிந்து வருகிறாள்.
இவ்வரலாறு திருநெல்வேலி மாவட்டத்தில் வில்லுப்பாட்டில் இடம் பெறுகிறது. இக்கதையில் நாக லோகம், புராணங்களின்படி மகிஶனைக் கொன்ற துர்கா பரமேஸ்வரியின் சரித்திரம் போன்றவை கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புற்று மாரி
மாரியம்மன் சிவபெருமானை நோக்கி வரம் வேண்டி தவம் மேற்கொண்டாள். அன்ன ஆகாரமின்றி மேற்கொள்ளப்பட்ட இக் கடுந்தவம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்தது. அதனால் அவளைச் சுற்றி புற்றுகள் தோன்றி வளர்ந்து அவளை முழுவதும் மறைத்து விட்டன.
இதனால் புற்றுக்கும், புற்றில் குடியிருந்த பாம்புகளும் மாரியம் மனுக்கு நெருக்கமாயின. பிற்காலத்தில் புற்றில் இருந்த மாரியம்மனின் உருவம் சுயம்புவாக வெளிப்பட்டது. பல இடங்களில் புற்றில் தான் இருக்குமிடத்தை தன் பக்தர்களுக்கு உணர்த்தி வெளிப் பட்டாள் மாரியம்மன். பல இடங்களில் இவ்வாறே புற்றிலிருந்து வெளிப்பட்ட, சுயம்புவான பல மாரியம்மன் கோயில்கள் கட்டப்பட்டன.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை