Recent Posts

திருவிளையாடல் புராணம் - மூர்த்திப் பெருமை



திருவிளையாடல் புராணம் 

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 

மூர்த்திப் பெருமையும், தீர்த்தப் பெருமையும்






           லைகளில் மேலானது கைலாஸ மலை.  எண் திசைகளிலும் பூதகணங்கள் காவலிருக்கின்றனர். கைலாஸ மலையின் நடுவில் மஹாமேரு; மஹாமேருவைச் சுற்றி கற்பகச் சோலைகள்.  சிந்தாமணிக் குன்றுகள்.  நடுவில் கண்ணாடி போல் ஜ்வலிக்கும் நகரம்.  பால், தயிர், நெய், தேன் தனித்தனியான ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.   அங்குள்ள கிரஹங்களின் மேற் கூரைகள் சூரிய ஒளிபோல் கண்ணைக் கூசாமலும், கோடி  சந்திரப்பிரகாசம் போல் மனதை பிரம்மிக்கச் செய்யும்படியும் பிரகாசிக்கின்றன.

        2. பொற்றாமரையில் அமாவாசையன்று நீராடினால் கங்கையில் நீராடுவதின் நூறு மடங்கு பலன். மாதப் பிறப்பன்று ஆயிரம் மடங்குபலன், கிரஹணத்தன்று லட்சம் பங்குபலன்; தட்சிணாயணம், உத்தராயணப் புண்ணிய காலங்களில் கோடிபங்கு பலன் (திங்கட்கிழமையும் அமாவாசையும் சேரும் அன்று அரசப் பிரதட்சணம் செய்வது விசேஷம்) (அரசப் பிரதட்சணம் செய்யும் தினத்தன்று முற்பிறப்பில் செய்த பாவங்கள் தொலைகிறது.)

     3. யாகங்களில் அசுவமேதமும், மலைகளில் மேருவும், விரதங்களில் சோமவார நோன்பும், மந்திரங்களில் ஆறெழுத்தும், தானங்களில்  அன்னதானமும், மரங்களில் பாரிஜாதமும், பசுக்களில் காமதேனுவும், கஜங்களில் ஐராவதமும், அச்வத்தில் உச்சை சிரவஸும், கடலில் பாற்கடலும், நாகங்களில் ஆதிசேஷனும், இரத்தினங்களில் சிந்தாமணியும், லிங்கங்களில் சுயம்புலிங்கமும் சிறந்தவை. பூலோக சிவலோகம் எனப்படும் மதுரையில் சோம சுந்தரப் பெருமான் சுயம்புலிங்கம்.  அவருடைய திருவிளையாடல் களைச் சொல்பவருக்கும், கேட்பவருக்கும், படிப்பவருக்கும் பிரம்மஹத்திப் பாவங்களும் கூடத் தொலைந்து விடும்.  கடம்பவன நாதன் லீலைகளை வரிசையாய் சொல்ல அவன் கிருபை செய்ய வேண்டும் என்று சூதமுனிவர் வேண்டிக்கொண்டு சிவலீலை களைச் சொல்லத் தொடங்கினார்.

      பசுக்களெல்லாம் காமதேனுவாகவும், காளைகளெல்லாம் ரிஷபங்களாகவும் ஒவ்வொன்று ஒவ்வொரு நிறமாய், கண் நிறைந்து பார்க்கப் பார்க்க ஆசைத் தீராது.  கன்றுக்குட்டிகள் எலும்பும் தோலுமாய் இராமல் கட்டுக்குட்டென்று புஷ்டியாய் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அழகே அழகு!

         இதன் நடுவில் நவரத்ன மயமான மாளிகைதான் சிவ பெருமானின் இருப்பிடம்.  அதன் எதிரில் ஸ்படிகம் போன்ற நீரையுடைய ஓர் அழகிய குளம்.  அதன் எதிரில் இரத்தினக் கால்கள் ஆயிரம் கொண்ட ஒரு பெரிய மண்டபம்.  அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் பெரிய கம்பளி விரிப்பின் மேல் நடு நாயகமாக ’ஸுதர் என்ற முனிவர் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி ஈசன் கதை கேட்க எண்ணாயிரம் ரிஷிகள் காத்திருந்தனர்.

   "பூலோகத்திலேயே மிகச் சிறந்த தீர்த்தமும், ஸ்தலமும் எவை?" என அவர்கள் சூதமுனிவரிடம் கேட்டனர்.

           இந்த சூத முனிவர் லேசுப்பட்டவரல்ல... நெருப்பிலே பிறந்தவர்.  வியாசருடைய சீடர்.  பெரிய சிவபக்தர்.  அவர் சிவபெருமானை தியானித்துக்கொண்டு முன் ஒரு சமயம் இதே கேள்வியை பார்வதி பரமசிவனிடம் கேட்டாள்.  அதற்கு சிவபெருமான் சொன்ன பதிலை உங்களுக்கு இப்போது நான் சொல்கிறேன். பார்வதியின் மடியிலிருந்து முருகப்பெருமானும் இக்கதை முழுவதும் கேட்டார்.

        அகத்தியர் என்ற முனிவர் வேண்டிக் கேட்டுக் கொள்ள முருகன் அவருக்குக் கூறினார்.  அகத்தியரிடமிருந்து என் குரு வியாசர் அறிந்துகொண்டார்.  அவர் எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

      காசி, காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை இந்நான்கும் சிறந்தவை.  அதிலும் மதுரை மற்ற மூன்றிலும் மிகச் சிறப்பு வாய்ந்தது" என்று  கூறினார்.

        "காசியை விட மதுரை எப்படிச் சிறந்ததாகும்?" என்றார் முனிவர் சிவானந்தர்.

  "சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களையும் நடத்த உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்ததாலும், இங்குள்ள லிங்கம், சோமாஸ்கந்த மூர்த்தி, தானே தோன்றியவர் என்பதாலும், ஈசன் தன் சடையிலிருந்த சந்திரனின் ஒளியமுதை வாரியிறைத்தான் என்பதாலும் மதுரை சிறப்புற்றது."

    "அதற்கு மதுரையென்ற பெயர் வரக் காரணம்?" என்றார் ஜலாசி என்ற முனிபுங்கவர்.

  "அமுதை வாரியிறைத்ததால் இனிப்பான ’மதுரை எனப் பெயர் வந்தது.  அவ்வூரை நினைக்கும் தோறும் நெஞ்சில் இனிப்பூறும்.  அது வெள்ளியம்பலம்.  அங்கு இறைவன், கால் மாறி ஆடினான்.  முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத் தெண்ணாயிரத்தெட்டு ரிஷிகளும், பிரம்மா, விஷ்ணு, இந்திரனும் அங்கு வந்து இறைவனை வணங்குகின்றனர்.  இதற்குப் பூலோக சிவலோகம், கடம்பவனம், நான்மாடக்கூடல், திருவாலவாய் என்றும் பல பெயர்களுண்டு.  கோவிலிலுள்ள பொற்றாமரைக் குளம் ஈசனாலேயே தோற்று விக்கப்பட்டது.  இதில் நீர்ப் ராணிகளே கிடையாது".

    "அப்படியா? அதைப்பற்றிச் சற்று விவரமாகக் கூறுங்கள்" என்றனர் ரிஷிகள்.

 நந்தி முதலிய கணங்களுடன் சிவபெருமான் பூலோக சஞ்சாரம் செய்கையில் சுயம்புலிங்கமான சுந்தர மூர்த்தியின் அபிஷேகத்திற் காக நந்திதேவரின் வேண்டுகோளுக் கிணங்க லிங்கத்துக்கு தென்கிழக்கில் சூலத்தால் குத்தினார்.  உடன் அங்கிருந்து தூய தெளிந்த நீர் கிளம்பி, குளம் நிரம்பி வழிந்தோடத் தொடங்கியது.  உள்ளடங்கி இருக்கும் வண்ணம் அதைத் தடுத்தவர், தன் சடையிலுள்ள கங்கை நீரை அதில் சேர்த்தார்.  அதில் குளித்தவர் களுக்குப் பெரும் புண்ணியமென்று கூறி, தானும், தன் பூதகணங்க ளுடன் நீராடிய புண்ணிய தீர்த்தம் பொற்றாமரைக் குளம்.

 இவ்வாறு சூதர் கூறியதும் முனிவர்கள் சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் நிகழ்த்தினார் எனக் கூறினீர்களே, அதை வரிசையாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.



     இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.

 ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.             

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


      இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி..















கருத்துகள் இல்லை