மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - தலை மாறிய மாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
தலை மாறிய மாரியம்மன்
ஓர் ஊரில் ஒரு சிவபக்தர் நீண்ட நாள் குழந்தையில்லாமல் வருந்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் தோட்டத்தில் அழகான பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.
பருவம் வந்ததும் அவளுக்கொரு துணையைத் தேடி திருமணம் செய்து வைக்க முயன்றனர். ஆனால் அந்த பெண்ணோ ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்ததால் மண வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. நிலையற்ற மனித வாழ்க்கையில், இறைவனைத் தவிர வேறொருவரும் நமக்குத் துணையில்லையென்றும் அந்த ஆண்டவனின் திருப்பாதங்களன்றி தனக்கு வேறு எந்த நினைவுகளும் வருவதில் லையென்றும் உறுதிபடக் கூறினாள். வளர்ப்புத் தந்தை மேலும் மேலும் வற்புறுத்த அதைப் பொறுக்காத அப்பெண், ஒழுக்க முறைகளைப் பின்பற்றாத சண்டாளனை திருமணம் செய்துகொள்ள விரும்ப வில்லைசு என்று பிடிவாதமாகக் கூற தந்தை வெகுண்டார்.
தங்கள் வம்சத்தை ஏசியதை பொறுத்துக்கொள்ள முடியாத அவள் தந்தையைச் சார்ந்த சமூகத்தினர் அவனைக் கொன்றுவிட முடிவு செய்தனர். ஊர் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அவள் தந்தையும் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதித்தார்.
கொலையாளிகள் பெண்ணின் தலையைத் துண்டித்து வீசி எறிந்துவிட்டனர். அத்தலை வெகுதூரம் சென்று செடி கொடிகளுக் கிடையில் விழுந்தது.
பரசுராமர் தன் தாயை சிரச் சேதம் செய்தபின் தன் தந்தையின் ஆசியுடன் மீண்டும் தன் தாயை உயிர்பிக்க வந்த போது, தன் தாயின் தலையை வெட்டுண்ட இடத்தில் காணாமல் சுற்றும் முற்றும் தேடும் போது, அழகிய இப்பெண்ணின் தலை கிடைக்கவே, அதைத் தன் தாயின் தலை என்று நினைத்து உடலுடன் சேர்த்து மந்திரநீரைத் தெளிக்க தலையும் உடலும் இணைந்து ரேணுகாதேவி உயிர் பெற்றாள்.
மீண்டும் உயிர் பெற்ற ரேணுகாவை வணங்கி இல்லம் திரும்பும் படி பரசுராமர் கேட்க, ரேணுகாவோ தன் தலை மாறிவிட்டதால் முனிவர் தன்னை ஏற்க மாட்டார்சு, என்று கூறினார். ஆனால் பின்னர் பரசுராமரின் வற்புறுத்தலால் முனிவரிடம் முன் சென்று தன்னை பொறுத் தருளுமாறு வேண்டினாள்.
முனிவர் ரேணுகாவிடம் அவள் தலை மாறிவிட்டதால் அவளை ஏற்க முடியாதென்று சொல்ல, ரேணுகா தேவி தன் கணவரிடம் தான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தானே அவருடைய மனைவியாக அமைய வேண்டுமென்ற வரம் கோரினாள்.
ரேணுகாவின் அன்பை உணர்ந்து மகிழ்ந்த ஜமதக்னி முனிவர் என்றும் அருவமாய் தன்னுடனேயே இருப்பாய் என்ற வரமளித்து அவள் உடல் வேறு தலை வேறாக மாறிவிட்டதால் மாரியம்மன் என்ற பெயர் கொண்டு உலகை காத்துவருவாய் என்று ஆசீர்வதித்து சென்று விட்டார். அவளே இன்று முகம் மாறிய அம்மனாக நாட்டுப்புறங்களில் வணங்கப்படுகின்றாள். முகம் மாறிவிட்டதால் இவளுக்கு உருவம் இல்லாமல் வடிவமில்லாத கல் நட்டு அதற்கு கண், காது, மூக்கு போன்றவற்றை சந்தனம் மற்றும் மஞ்சளில் சாற்றி தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இதன் வேறொரு வடிவம், தன் தாயை மீண்டும் உயிர்பிக்க வந்த பரசுராமர் தன் தாய் வெட்டுண்ட இடத்தில் மேலும் பல உடல்கள் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டு எது தன் தாயின் உடல் என்று தெரியாமல் தன் தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடலுடன் பொருத்தி மந்திர நீர் தெளிக்க உயிர் பெற்றெழுந்தாள் ரேணுகா தேவி.
மீண்டும் உயிர் பெற்ற தன் தாயை வணங்கி, தன்னை மன்னிக் குமாறு வேண்டினார். தனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தன் மகனான பரசுராமனை ஆசீர்வதித்து அவனுடன் ஆஸ்ரமம் திரும்பினாள் ரேணுகா. ஆனால் அவளுடைய உடல் மாறிவிட்டதால் அவளை ஏற்க இயலாதென்றும் அவள் கிராமங்களுக்குச் சென்று கிராம மக்களை காவல் காத்து அவர்கள் தரும் நிவேதனத்தை ஏற்று அருளுமாறும் அவளை ஆசீர்வதித்து அனுப்ப அவளும் அவ்வாறே செய்தாள். கிராம மக்கள் அவள் உடல் மாறிவிட்டதால் அதை விடுத்து அவள் தலையை மட்டும் வைத்து ரேணுகா தேவியாக வணங்கி வருகின்றனர்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை