திருவிளையாடல் புராணம் - வெள்ளம் தடுத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
வெள்ளம் தடுத்தல்
கடல்நீர் உறிஞ்சப்பட்டது கண்டு வருணன் கடும் சினம் கொண்டான். கண்கள் சிவந்தன. புருவங்கள் நெறிந்தன. எப்படி நிகழ்ந்தது என்று ஒரு பக்கம் வியப்பு, மறுபக்கம் வெட்கம். தோல்வி அடைந்து விட்டோமே என்று துக்கமும், நீரின்றி உலகில் இயக்கமே இல்லை எனக்கே தோல்வியா என்ற திகில்! உடனே உக்கிரகமான நான்கு மேகங்களை அழைத்து, இடைவிடாமல் மதுரையில் சொரியுங்கள்" என ஆணையிட்டான்.
நகரெங்கும் காதுகளைச் செவிடாக்கும் மேக முழக்கம். கண்களைப் பறிக்கும் மின்னல்கள். ஆலங்கட்டி மழையோ என்னும்படி கற்கொண்டு அடித்தாற்போன்ற ஜல தாரைகள்... எதிரிலிருக்கும் எதுவும் விளங்கவில்லை! எங்கும் நீர்... எதிலும் வெள்ளம்.
பழைய பெருச்சாளி போய் புதுப்பூனை வந்தாற்போல் இது என்னடா, யுகம் முடியப்போகிறதா!" என அனைவரும் மருண்டனர். மீண்டும் கோவிலை அடைந்து இறைவனைச் சரண் அடைந்தனர்.
பசி, பசி என்றழும் குழந்தைகள், குளிரில் விறைத்து, ஆடை நனைந்த சிறுவர்கள்; எங்கும் ஒரே ஓலம்...!
பக்தபராதீனராயிற்றே! பார்த்துக்கொண்டு பேசாதிருப்பாரா? முன்னம் கடலை உறிஞ்சிய நான்கு மேகங்களையும் அழைத்து, நகரைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் கூடாரம் போல் நின்று, பிரஜைகளைக் காத்திடுக" என உத்தரவிட்டார். ஆலவாய்த் தலமே ஒரு மண்டபம் போல் ஆகிவிட்டது.
ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடிக்க வில்லையா? சொட்டுநீர் கூட நகரில் புகவில்லை. தேவரும், முனிவரும் இந்த அற்புதத்தைக் கண்டு களித்தனர். இதைக் கண்டு பயந்த வருணன் மேகங்களை மழையை நிறுத்த உத்தரவிட்டான். ஈசன் காலடியில் பணிந்து எழுந்து தம் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
பொற்றாமரையில் நீராடி, புண்ணிய நதி தீர்த்தங்களாலும், புஷ்பங்களாலும் இறைவனை பூஜை செய்தான். இத்துணை காலமாக அவனைத் துன்புறுத்திய ’சலோதர நோய் பகலவனைக் கண்ட பனிபோல் போன இடம் தெரியவில்லை.
அறியாமையால் இரண்டு குற்றங்கள் புரிந்து இந்திரன் சொற்கேட்டு அபிஷேக பாண்டியனை சோதிக்கத் துணிந்த என்னைப் பொறுத்தருள வேண்டும்" எனப் பலவாறு போற்றித் துதித்தான். இறைவனும் அவனுக்குப் பல வரங்கள் அளித்து மறைந்தார்.
பெரும் மழை, சூறாவளி, கடலில் மாட்டிக் கொள்ளுதல் போன்ற ஆபத்துக் காலங்களில் இறைவனது இந்த 19-ஆம் திருவிளை யாடலை எண்ணித்துதிப்போர்க்கு அக்கஷ்டங்கள் பொடிபொடி யாகி விடும். வயிற்று உபாதைகளும் நீங்கும்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.


கருத்துகள் இல்லை