மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - இருக்கன்குடி மாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள்
இருக்கன்குடி மாரியம்மன்
ஒவ்வொரு ஊரிலும் அம்பிகை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சம்பவ அடிப்படையில் வந்து அருள்பாலிக்கிறாள். இருக்கன்குடி மாரியம்மன் அவ்வூர் மக்களின் துயர் துடைக்க வந்து அருள் பாலிப்பது எப்படி? இந்த சம்பவம் நடந்தது எப்பொழுது? சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்! சாணம் பொறுக்க வந்த பெண் தனது கூடையை ஒரு இடத்தில் வைத்து சாணம் பொறுக்கி சேகரிக்கிறாள். ஓரளவு சாணம் சேர்த்தபின் அங்கிருந்த கூடையை அகற்ற முற்பட்டாள். முடியவில்லை. அம்பாள், தான் வந்து அமர்ந்து அருள்பாலிக்க என்னென்ன செய்கிறாள் தெரியுமா? அப்பெண்ணிடம் புகுந்து அருள் வாக்கு கூறினாள். அக்கூடை இருக்குமிடத்தில் தனது விக்ரகம் இருப்பதாகவும், வெளியே எடுத்து கோயில் கட்டினால், மக்களுக்கு அனைத்து நலன்களையும் அருளுவதாக அருள்வாக்கு கூறினாள். அப்பெண்ணின் அருள்வாக் கின்படி ஊர் மக்கள் சிலையை எடுத்து கோயில் கட்டி பூஜை செய்த இடமே இருக்கன்குடி.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அம்பிகையை வழிபட அம்மை மட்டுமல்லாது அனைத்து நோய்களும் குணமாகும்.
வைப்பாறு, அர்ச்சுனன் ஆறு ஆகிய இரு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திருக்கோயில் அறங்காவலர்களாகவும், பரம்பரை பூசாரிகளாகவும் இருந்து நிர்வாகமும், பூஜையும் மேற்கொள்கின்றனர்.
இரு சங்கை (வைப்பாறு, அர்ச்சுனன் ஆறு கூடுமிடம்) அம்மன் குடி கொண்டுள்ளதால் இருக்கைகுடி. இந்த அர்ச்சுனன் நதி புராணப் பெயர் பெற்றது. முன்னொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் இப்பகுதிக்கு வந்த பொழுது நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் அர்ச்சுனன் தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளிக் கொணர்ந்தததால் இது அர்ச்சுனன் ஆறு எனப்பட்டது. கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டிருப் பாள். ஆனால் இந்தக் கோயில் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறாள். இந்த அண்ட சராசரத்தில் ஆக்குவதும், அழிப்பதும் நானே, எனையன்று ஓர் அணுவும் அசையாது என்பதை நினைவூட்டுகிறாள். இந்த அமைப்பே இந்த அம்மனின் சிறப்பம்சம்.
இருக்கன்குடி மாரியம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாற்றுதல், பூஜை செய்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல், உடல் குறைபாடு உள்ளவர்கள் உருவம் செய்து வழிபடுதல், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுதல், போன்ற பிரார்த்தனைகளை மக்கள் செய்து வழிபடு கின்றனர். ஆடு, கோழி பலியிட்டு அவற்றை உணவு சமைத்து அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்த கோயிலிலுள்ள கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்கு ஏற்பட்ட வழிபாடு அம்மனுக்கும் தொடர்கிறது.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை