மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - பீர்க்கன்கரணை - சூல் காத்த அம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள்
பேச்சு வழக்கில் இவளை சூராத்தம்மன் என்று மக்கள் அழைக்கின்றனர். ஒரு காலத்தில் சென்னை பீர்க்கன்கரணை அடர்ந்த காடாக மரங்கள் சூழ்ந்திருந்தது. அச்சமயம் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி விறகு எடுக்கச் சென்று மழையின் காரணத்தால் அங்குள்ள வேப்பமர அடியில் தங்கினாள். அப்பொழுது திடீரென இடுப்பு வலி மிகுதியால், ஆத்தா மகமாயி நீதாம்மா துணையாயிருந்து காப்பாத்தணும் என்று வேண்டிக் கொண்டாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு பெண் வந்து அம்மா என் மடியில் உன் தலையை வைத்துக்கொள்; கவலைப்படாதே என்று நெற்றிப்பொட்டில் விரலை வைத்தாள். அப்பெண் மயக்கமானாள். கண் விழித்து பார்க்கும் போது ஒரு அழகான ஆண் குழந்தை. அருகில் அந்தப் பெண் பிரசவமான பெண்ணிற்கு உடல் சோர்வு வராமல் இருக்க கையில் கஞ்சியுடன் பச்சிலைகளின் சாற்றை சேர்த்து இத குடி என்று ஊட்டினாள்.
நன்றி மேலிட அம்மா, நீங்க யாரும்மா? இவ்வளவு உதவி செய்கிறீர்கள்! என்றாள் தேம்பியபடி. அவள் முதுகைத்தடவி இங்கு தான் இருக்கேன் எப்ப வேண்டுமானாலும் வரீ என்றாள். அப்பெண் கைக்குழந்தையோடு ஊர் வந்துபோது அவளை சூழ்ந்து கொண்டு உறவினர்கள் அது காடாச்சே! இது எப்படி சாத்தியம் என ஆச்சரியப்பட்டனர். அனைவரும் காட்டுக்குள் சென்றனர். அவள் காட்டிய அந்த வேப்ப மரத்தடியில் ஒரு கற்சிலை மட்டுமே இருந்தது. அங்கு ஒரு பெண்ணிற்கு அருள் வந்து நான் உங்கள் தெய்வம் என்றென்றும் உங்கள் குறைகளை காத்து நிற்பேன் என்று கூற அனைவரும் சூல்காத்தம்மா, சூல்காத்தம்மா என மனமுருகி வேண்டி நின்றனர்.
சூல்காத்தம்மன் பாதத்தின் கீழே ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. வடக்கு பார்த்து அமர்ந்திருக்கும் அந்த அம்மன்தான் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தவள். இந்த கோயில் மரங்களில் குழந்தை வரம் வேண்டி ஏராளமான தொட்டில்களும், திருமண வரம் வேண்டி மஞ்சள் கயிறுகளும் கட்டப்பட்டுள்ளது. பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேற்றுகிறாள் சூல்காத்தம்மன்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை