மஹா மாரியம்மன் - திருமுல்லைவாயல் - அன்னை பச்சையம்மன்
மஹா மாரியம்மன்
திருமுல்லைவாயல் - அன்னை பச்சையம்மன்
திருமுல்லைவாயல் - அன்னை பச்சையம்மன்
அட்சய பாத்திரமாக அருள்வதில் அவளுக்கு நிகர் யார்? குழந்தைப்பேறு, வேலை பாக்கியம் என்று எத்துனை தேவைகளோடு மக்கள் வேண்டினாலும் அருள்வதில் வள்ளல் இவள். சென்னை திருமுல்லை வாயிலில் பச்சையம்மன் ஆலயம் உள்ளது.
பச்சையம்மன் இடது பாதம் மடித்து வலக்காலை தொங்கவிட்டு மிளிர்கிறாள். அன்னையின் மேனியே பச்சைதான். இந்த தாயின் காலடியில் பணிந்து மனமுருகி வணங்கி கும்பிட்டால் பணிவோரின் படைப்பாற்றலை பெருக்கி காண்பிப்பாள். இங்கு அம்பாள் கையில் கிளியை ஏந்தியிருக்கிறாள்.
ஒரு தடவை சிவபெருமான் பார்வதியை பூலோகத்துக்கு சென்று தவம் இயற்ற உத்தரவிட்டார். பூலோகத்துக்கு பார்வதி தேவி புறப் பட்டு வந்த போது பூமி பச்சை பசேலென காட்சி அளித்தது. இதனால் பார்வதி தேவியும் பச்சை நிறத்துக்கு தன்னை மாற்றிக்கொண்டாள். பூலோகத்தில் பல்வேறு தலங்களுக்கு சென்று பார்வதி தேவி தவம் இருந்தார். இறுதியில் திருமுல்லைவாயில் தலத்தில் நிரந்தரமாக இருந்து சிவபெருமானை பூஜித்து தவம் இருந்தார். இத்தலம் மிகத் தொன்மையானது. பல்வேறு பேரரசர்கள் அம்பிகையின் பாதம் பணிந்து நல்லாட்சி புரிந்த அற்புத பூமி. நாகர் சிலைகளும், மஞ்சளும், குங்குமமும், பச்சை மண்ணும் அந்த இடத்தின் சாந்நித்தியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பச்சையம்மனை வேண்டி பிரார்த்தனையாக தொட்டில்களை தொங்கவிட்டுள்ளார்கள் பக்தைகள். அம்பிகையும் அவர்கள் வீட்டில் தொட்டில் கட்ட அருளாசி புரிகின்றாள். நம் அம்மா எதையும் எதிர்பார்த்து செய்கிறாளா? இல்லவே இல்லை. உண்மையான அன்பு ஒன்றே அவள் அனுக்கிரகிப் பதற்கு போதுமே.
சித்தாத்தூரி - கும்மாத்தம்மன்
குடியை வாட்டும் கும்மாத்தம்மன் ஆம். தற்போது உள்ள காலகட்டத்தில் குடிக்காத குடிமகனை விரல்விட்டு எண்ணி விடலாம். என்னவோ தெரியவில்லை, மக்களுக்கு குடி தரும் போதையில் ஒரு மயக்கம். இவர்கள் எப்போது தெளிவார்கள்? அம்பாள் துணையுடன் இந்த கெட்ட பழக்கம் கூட மாறிவிடுகிறது. இப்படி குடிப்பழக்கம் உள்ளவர்கள் அன்னை விசாலாட்சியிடம் எலுமிச்சம்பழம் பெற்று 11 முறை கும்மாத்தம்மனை சுற்றி வந்து எலுமிச்சம்பழம் கடித்து உண்ண வேண்டும். இவ்வாறு மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் இந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுபெறுவது நிச்சயம்.
வேலூரிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் வேப்பூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் தென்னை மரங்கள் சூழ்ந்த சித்தாத்தூரி என்ற சிறிய கிராமத்தில் அம்பாள் கொலுவீற்றிருக்கிறாள். வேம்பும், அரசும் பின்னி வளர்ந்த மரத்தடியில் புற்று அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அன்னை விசாலாட்சி அருள்வாக்கு கூறுகிறாள். திருமணம், மழலைச் செல்வம், மண முறிவு தொல்லைகள் தருதல் என மனிதனின் கஶ்டங்களுக்கு ஏதேனும் முற்றுப்புள்ளி உள்ளதா? இல்லையே. அம்பாள் மனிதனின் மனம் பண்பட பல்வேறு கஶ்டங்களை அவன் செய்யும் பாவ செயல்களுக்கு ஏற்றாற்போல நிர்ணயம் செய்கிறாள். ஆனால் அவளை மனதார வழிபடுவதன் மூலம் அத்துன்பங்களும் விலகி விடுகின்றன. அன்னை விசாலாட்சியிடம் அருள்வாக்கு கேட்டு அங்கு புறப்பரப்பில் உள்ள கறுப்பு நிறக் கல்லில் முதல் வாரம் மேலிருந்து கீழாக மஞ்சள் பூசி 108 குங்குமப் பொட்டுகள் வைத்து 108 முறை புற்றை வலம் வர வேண்டும். இதன்படியே 2வது வாரமும் செய்ய வேண்டும். மூன்றாவது வாரம் கீழிருந்து மேலாக 108 மஞ்சள் பூசி குங்குமம் பொட்டு வைத்து 108 முறை சுற்ற 4வது வாரம் நமக்கு கைமேல் பலன் கிடைக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆத்மார்த்தமாக செய்தால் அம்பாள் தாமதிக்காமல் அருள்புரிவாள்.
குலசேகரன்பட்டினம் - குலசை முத்தாலம்மன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் குலசேகரன் பட்டினத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. அம்மை நோய் கண்டவர்கள் இத்திருத்தலத்தில் வழிபட்டால் உடனடியாக குணமாகி விடுகிறது. கை, கால் ஊனம், தொழுநோய், மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் இத்திருத்தல தேவியை 41 நாட்கள் விரதமிருந்து வழிபட நோயிலிருந்து விடுபடுவது உறுதி. இங்கு சுவாமி சிவமயமாக காட்சி தந்து அருள்கிறாள். அம்பாள் சக்திமயமாக இருக்கிறாள். இதை பரிவர்த் தனை நிலை என்பர். திருச்செந்தூர் பகுதியில் அம்மை நோய் கண்டவர்கள் அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டுவர். இதனால் முத்து இறங்குகிறது. முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன் என வழங்கப்படுகிறாள். இவள் பிள்ளைவரம் அருள்வாள்.
மன சஞ்சலம் நீக்கும் பாளையம் ஸ்ரீ மாரியம்மன்
மன சஞ்சலம் எல்லோர்க்கும் பொதுவானது. சிறுவர் முதல் பெரியவர் வரை யாருக்குதான் இல்லை? அவரவர் துன்பத்திற்கு ஏற்றாற்போல சஞ்சலங்கள் வேறுபடுகின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? தேவையில்லாமல் நம்மால் இயலாத காரணத்தால் புலம்புகிறோம். புலம்புவதால் ஏதேனும் துன்பங்கள் நீங்குகிறதா சொல்லுங்கள். நம்மைச் சேர்ந்த, பொறுமையுடன் நம் பிரச்சனைகளைக் கேட்பவரிடம், குறை களைச் சொல்லி புலம்பலாம். ஆனால் இந்த அவசர யுகத்தில் தேவையானவற்றைப் பேசவே நேரம் போதவில்லை. மேலும் தற்கால இளைஞர் சமுதாயம் எதையேனும் காது கொடுத்து கேட்கிறதா? ( இஞுடூடூ கடணிணஞு பாட்டு தவிர) இல்லையே. நம் குறைகளை முறையிட ஏற்ற இடம் நாம் வணங்கும் கோயில்கள்தான். ஈஸ்வரன், ஈஸ்வரியை விட்டால் நம் குறை தீர்ப்பவர் யார்? கேள்விக்குறிதான்.
அத்தியூருக்கும், பவானிக்கும் மத்தியிலுள்ள படுவாச்சி கிராமத் திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாளையம் என்னும் ஊரின் மத்தியில் கேட்பதைக் கொடுக்கும் ஸ்ரீ மாரியம்மனின் கம்பீரமான திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த மாரியம்மன் கோயிலில் ஒரு வித்தியாசமான பிரார்த்தனை. மாசி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் நடை பயண பிரார்த்தனை மிகப் பிரபலமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் (ஆண், பெண் இருபாலரும்) கோயிலைச் சுற்றி இரவு முழுவதும் விடியவிடிய நடப்பார்கள். இது போன்று தமிழ் நாட்டில் வேறெங்கும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உடல் நலக்குறைவு, குழந்தைப்பேறு வேண்டுதல், மனசஞ்சலம், மணவாழ்க்கையில் வேறுபாடு போன்ற காரணங்களுக்கு விடைதேடி அம்பிகையை வலம் வருகின்றனர். விடிய விடிய நடந்தால் மன சஞ்சலம் அம்பாள் அனுக்கிரஹத்தால் நீங்கிவிடுகிறது.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை