மஹா மாரியம்மன் - மயிலாப்பூர் - நாகாத்தம்மன்
மஹா மாரியம்மன்
மயிலாப்பூர் - நாகாத்தம்மன்
சென்னை மயிலாப்பூரில் மசூதி தெருவில் இந்த கோவில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். இந்த தெருவில் ஒரு பணக்காரருக்கு சொந்தமான இடத்தில் அரசமரம் இருந்தது. ஒரு சமயம் அவ்விடத்தின் வழியே ஒரு பெரியவர் சென்றபோது அரசமரத்தினருகே ஒரு நாகம் படமெடுத்தாடி பின் வலைக்குள் புகுந்ததைப் பார்த்தார்.
அம்பாள் மாரியம்மன் நாகாத்தம்மனாக இங்கு உறைகிறாள் என்று புரிந்தது. அவ்விடத்தில் தென்னங்கீற்று வேய்ந்து மஞ்சள், குங்குமம் தடவி தினமும் கற்பூர தீபம் காட்டி வந்தார். பல மாதங்கள் கழிந்த பின்னர் ஒரு நாள் அந்த இடத்தின் சொந்தக்காரர் வந்து இவ்விடத்தில் வீடு கட்டப் போவதாகவும் அங்கிருக்கும் அரச மரத்தை அப்புறப் படுத்தப் போவதாகவும் கூறிவிட்டு காசிக்கு சென்று விட்டார் அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை.
மனையின் சொந்தக்காரர் மனைவி நிறைமாத கர்ப்பிணி. அவர் கணவர் அந்த அரச மரத்தை அப்புறப்படுத்த நினைத்ததன் பலனாக ஊரே திரும்ப முடியவில்லை. அவர் இறந்த செய்திதான் வந்தது. மனைவி மிகவும் வருந்தினாள். அவளது பிரசவ நேரம் நெருங்கியது. என்ன சோதனை? அவளுக்கு ஆண்பிள்ளை பிறந்தது. கூடவே ஒரு பாம்பும் பிறந்தது. அரண்டாள்.
அப்பொழுது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து, உன் கணவன் இந்த மரத்தை வெட்டப் போகிறேன் கோவிலைப் பிரித்து விடு என்றான். நாகாத்தம்மன் குடியிருக்கும் இந்த அரசமரம் சக்தி வாய்ந்தது. ஆகவே இந்த மரத்தை வெட்டக்கூடாது என்பதற்கு அடையாளமாகத்தான் குழந்தையோடு பாம்பும் பிறந்திருக்கிறது என்றது.
பிள்ளை பெற்ற பெண் அரச மரத்தை வெட்டக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். உடனே பிள்ளையோடு பிறந்த நாகம் இறந்தது. அரச மரமும் பிழைத்தது. அந்த ஆண்பிள்ளையும் பிழைத்தது. அரசமரத்துடன் சேர்த்து அந்த கோவிலை கட்டினாள்.
ஆடி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி பாலாபிேஶகம் செய்து அம்பிகையின் அருள் பெறுகின்றனர். இன்றளவும் இத்திருக்கோலில் குடிகொண்டு அம்பாள் அனைவரையும் காத்தருள்கிறாள். இதே போல சென்னை வால்டாக்ஸ் ரோடில் நாகம்மன் அரச மரத்தடியில் புற்றுடன் இருத்து அருள் பாலிக்கிறாள்.
பராசக்தி பொதுவானவள். அன்னை அகிலத்து நாயகி. பரப் பிரம்மமே பரம்பொருள். பரம்பொருளே சக்தி. அபயகரம் காட்டும் அற்புத சக்தி. பராசக்தியே எல்லா இடத்திலும் அமர்ந்து அருள்பாலிக் கிறாள்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை