மஹா மாரியம்மன் - ஐஸ்வர்யம் அருளும் - காட்டூர் முத்துமாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஐஸ்வர்யம் அருளும் - காட்டூர் முத்துமாரியம்மன்
அம்மா நீ மனது வைத்தால் ஆகாத காரியம் ஏதேனும் இருக்கிறதா? உன்னையன்றி வேறு யாரால் அன்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி அருள்புரிய முடியும்?
காட்டூர், கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செல்வம் கொழிக்கும் கிராமம். அம்பிகையின் அருளை எண்ணி சிலிர்க்கின்றனர் ஊர் மக்கள்.
ஒரு காலத்தில் கோவையில் கடும் பஞ்சம், மழையின்றி பயிர்கள், உணவின்றி மக்கள், தொழில் நசிந்து வியாபாரிகள். இது போல பல துன்பங்கள். அப்போது இந்தப் பகுதிக்கு பெண்ணொருத்தி வந்தாள். அவள் யார்? எந்த ஊர்? யாருக்கு தெரியும்? எப்போதுமே நம் கவலையே அதிகம் இருக்கும் போது பிறரைப் பற்றிய கவலை சாத்தியமில்லை.
நமக்கு ஒரு பிரச்சனை, ஒரு வேலை நிகழ வேண்டு மானால் நம் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். அதுபோலதான் அந்த ஊர் மக்களுக்கு தங்களது கஶ்டமே பெரிதாக இருக்கும் போது புதிதாக ஒருத்தியா? இவள் வந்து என்ன செய்யப் போகிறாள்? என்று நினைக்கும்பொழுது அந்தப் பெண் நாலாபுறமும் பார்த்தாள். மெல்ல நடந்து குடிசைக்கு அருகில் சென்று நின்று தன்னையே கண்காணிக்கும் மக்களைப் பார்த்து, இனி இந்த ஊர் நல்லாயிருக்கும்” என்று கூறி குடிசைக்குள் சென்றாள். மறைந்தாள். வெளியே வரவில்லை. மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவளது அருள்வாக்கு அனைவரையும் நல்ல முறையில் வாழ வைத்தது.
முன் காலத்தில் அந்த குடிசை இருந்த இடத்தையே மக்கள் கோவிலாக எண்ணி வழிபட்டனர். பஞ்சம் மறைந்தது. விளை நிலங்கள் செழித்தன. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டினர். இவை அனைத்திற்கும் சாமியாகிப் போன அப்பெண்ணே காரணம் என்று கருதி பின் நாளில் குடிசை இருந்த இடத்தில் கோவில் எழுப்பி அம்பிகை விக்ரகம் பிரதிஶ்டை செய்தனர். சித்திரை மாத விழா இவ்வூரில் சிறப்பு திருவிழாவாக மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி, காஞ்சி ஸ்ரீகாமாட்சி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், திருக் கடையூர் ஸ்ரீ அபிராமி என திருவிழாவின் போது பல்வேறு வடிவங்களில் அம்பாள் அருள்பாலிக்கிறாள் .
இத்திருவிழாவில் அம்மனுக்கு பணமாலை சூட்டி அழகு பார்க்கின்றனர். சிறப்பு பூஜை முடிந்ததும் பக்தர்கள் அந்தப் பணத்தை தங்களது பூஜை அறையில் வைப்பது விசேஶம். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதில் அவர்களுக்கு துளியும் ஐயமில்லை.
சித்திரை 3வது செவ்வாய் இரவு அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது பூஜையில் வைத்துத் தரப்படும் மஞ்சள் சரடை வாங்கி பெண்கள் அணிந்தால் கணவனின் தீராத நோய் தீரும். தாலி பாக்கியம் நிலைக்கும். மறுநாள் ஊஞ்சல். பிள்ளை இல்லாதவர் ஊஞ்சல் பிரார்த்தனை செய்ய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மூல நட்சத்திரக்காரர்கள் ஒன்பது வெள்ளிக் கிழமைகள் வந்து எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் தோஶங்கள் நீங்கும். இத்திருக் கோவிலில் தனித்தனி சந்நதி கொண்டிருக்கும் ஸ்ரீமகாகணபதி, ஞானத் தையும், ஸ்ரீபால முருகன் மனநிம்மதியையும் நமக்குத் தந்தருளுவர்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை