Recent Posts

ஸ்ரீ விநாயக சதுர்த்தி விரத பூஜை

ஸ்ரீ விநாயக சதுர்த்தி விரத பூஜை 


பிள்ளையார் பெருமை:
அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது “ஓம்” எனும் பிரணவம். பிரணவத்தின் தோற்றத்தை எப்படி யாராலும் அறிய முடியாதோ அவ்வாறே விநாயகரின் தோற்றத்தையும் யாராலும் அறிய முடியாது. தொடக்கம் என்பது இருந்தால்தான் முடிவு என்பது உண்டு. ஆகவே முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் கடவுள் விநாயகர். அம்மையும் அப்பனும் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால், இவர் “கணபதி, கணேசர், கணாதிபன், கணநாதர்” என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
விநாயகர் முன் தோப்புக்கரணம் இடுவதால், அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். இவரது கருணையால் காவிரி நம் தமிழகத்தில் ஓடத் துவங்கியது. ஸூர்ய வம்சத்தாரால், வழிவழியாக பூஜிக்கப்பட்ட “ஸ்ரீரங்கநாத பெருமாள்” திருவரங்கத்தில் எழுந்தருளி, இந்த பூமியில் அருள் புரிவது விநாயகரின் கருணையால்தான்.
சிவனாரிடமிருந்து, ஆத்மலிங்கத்தை ராவணன் பெற்றுக் கொண்டு வருகையில், அந்த ஆத்மலிங்கத்தை “கோகர்ணம்” எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளச் செய்தது விநாயகரின் கருணையே. நமக்கு “பாரதம்” என்ற இதிகாசம் கிடைக்கப் பெற்றது விநாயகரின் அருட் கருணையே.
வன்னி பத்திரம் விநாயக பெருமானுக்கு மிக மிக உகந்தது. ஐந்து அக்னிகளுக்கு இடையில் நின்று செய்த தவப் பயனும், யாகங்கள் செய்து அடையும் புண்ணியமும் ஒரு வன்னி இலையால் விநாயகரை வழிபடுவோருக்கு உண்டாகும்.
வரலாறு:
தாக்ஷாயணி, தன் தேஹத்தை யோகாக்னியில் விட்டு, மூன்று வயது சிறு பெண்ணாக ஹிமவானுக்கு அயோனிஜையாக தோன்றி, வளர்ந்து, வேத நூல்கள் பல கற்று, மணப்பருவம் அடைந்ததும் பரமசிவனையே மணக்கக் கருதி தன் தந்தை ஹிமவானிடம் விருப்பத்தைத் தெரிவித்து, அதற்குரிய வழியைக் கேட்டாள்.
அதற்கு ஹிமவான் “பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்-திகளுக்கும் மூலமாயிருக்கும் விநாயகரை ஆவணி மாத சுக்லபக்ஷ சதுர்த்தி நாளில் நினைத்து, விரதம் இருந்து, முறைப்படி பூஜை செய்தால், ஸகல விக்னங்களும் நீங்கி, ஸகல ஸித்திகளும் உண்டாகி, இவ்வுலகில் சுகமும் இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்” என்றார். உமாதேவி (தாக்ஷாயணி) தன் தந்தையிடம், “விநாயக சதுர்த்தி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும், இதற்கு முன்பு யாராவது அனுஷ்டித்து இருக்கிறார்களா?” என்று கேட்டாள். அதற்கு ஹிமவான்,
ஒரு சமயம் குமாரஸ்வாமி (முருகன்) பரமேச்வரனிடம், “தந்தையே எண்ணற்ற விரதங்களுள் முதன்மையானதும், எளிதில் அனேக நன்மைகளை அளிக்கக் கூடியதும், மிகவும் மேன்மையானதுமான விரதத்தை உபதேசிக்குமாறு கேட்டார்”.
அதற்கு ஆதியும் அந்தமுமில்லாதவனும், அனைத்துலகுக்கும் ஆதார நாயகனுமான பரமேச்வரன் “மகனே! நீ கேட்டவை அனைத்தையும் அளிக்கக் கூடியது விநாயக சதுர்த்தி விரதம் தான்” என்றார். அதற்கு முருகன் “தந்தையே! தங்கள் மகனான விநாயகருக்கு முதலில் பூஜை செய்ய சொல்வதன் காரணம்தான் என்ன?” என்று கேட்க, அதற்கு சிவபிரான், “மைந்தா! இப்பொழுது என் மகனாக அவதரித்திருக்கும் விநாயகர்தான் முன்பு அதர்மத்தை அழிக்க எத்தனையோ அவதாரங்களை எடுத்திருந்தார். ஆகவேதான் வேதம் முழுவதும் என்னையும் விநாயகரையும் வேறுபடுத்தாது ஒன்றாகவே பாவிக்கும். ஆகவே அவரது விரதத்தை ஏற்று பூஜையை செய்வது அனைத்து நன்மைகளையும் அளிக்கும்” என்றார். உடனே முருகனும் சூரபத்மனுடன் போரிடுவதற்கு முன் இவ்விரதத்தை அனுஷ்டித்து அப்போரில் வெற்றி பெற்றார்.
“ஆகவே இவ்விரதத்தை செய்து நீ விரும்பிய மணாளனையடைவாய்” என்று கூறிய தந்தை ஹிமவான், இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் முறையையும் மகள் உமாதேவியிடம் கூறினார். உடனே உமாதேவி பணியாட்களிடம் பூஜைக்கு வேண்டிய பொருள்களை ஆயத்தப் படுத்தும்படி கூறினாள்.
நறுமண கற்பக மலர்கள், பலவித தளிர்கள், நவரத்னங்கள், புனித நதி நீர், அருகு, வன்னி, பூமாலைகள் போன்ற பல அரிய பொருட்கள் தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் முதலியவற்றிலிருந்து வந்து குவிந்தன. நைவேத்தியத்திற்காக அறுசுவை உணவுகளும் பட்டியலிடப்பட்டன.
தங்கத்தால் அழகான மண்டபம் எழுப்பி அதை பவழம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்களாலும், புஷ்ப மாலைகளாலும் அலங்கரித்தும், கும்பத்தில் தாழை, நார்த்தையை கட்டியும், தூண்களில் வாழை, கமுகு, கரும்பு, மாவிலைத் தோரணம் கட்டியும் அலங்கரித்தார்கள். தூய்மையான இடத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, விநாயகரின் பிம்பத்தை செய்து வைத்தனர். ஹோம குண்டம் அமைத்து சந்தனம், பன்னீர், புனுகு கலந்து புகை மூட்டினார்கள். நவரத்ன பொடிகளால் கோலமிட்டு, சுவர்களில் சித்திரங்கள் வரைந்தனர். பூஜைக்காக தங்க பாத்திரங்கள் கொண்டு வந்தனர்.
உமாதேவி அதிகாலையில் கங்கையில் நீராடி விபூதி குங்குமமிட்டுக் கொண்டு, ருத்ராட்சம் தரித்து, ஆசமனம், அந்தர் பஹிர்ந்யாஸங்கள், பூதசுத்தி, ப்ராணாயாமம், ஸங்கல்பம் முதலியவைகளைச் செய்தாள் பிறகு சந்தனப்பலகையில் வேதியை (மேடை) அமைத்து அதன் மேல் அரிசியைப் பரத்தி அதன் மீது பொன்னாடையை விரித்து அதன் மீது, நூல் சுற்றிய, பொன்னாலாகிய குடத்தில் நீர் நிரப்பி, அதில் நவரத்தினங்களை சேர்த்து, குடத்தின்மீது, மாவிலை தளிர்களையும், தேங்காய், தர்ப்பை முதலியவற்றையும் வைத்து குங்குமம், சந்தனம், புஷ்பங்களால் அலங்கரித்தார்.
பிறகு கும்பத்தின் மேற்கில் விநாயக யந்திரத்தை வைத்து, அதனருகில் ஸ்வர்ண விநாயகரையும், பிருதிவிமூர்த்தியை(களிமண்) பொன் மண்டபத்திலும் எழுந்தருளச் செய்து அவற்றை சங்கு தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தினாள். கங்கை நீரால் நிரப்பிய பஞ்சபாத்திரத்தில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, அக்ஷதை, பால், தர்ப்பை, புஷ்பம், வெண் கடுகு, நெய், எள் முதலியவற்றை சேர்த்து அர்க்ய பாத்ய ஆசமனம் மந்த்ர பூர்வமாக செய்து புஷ்பாக்ஷதைகளால் முறைப்படி பூஜை, ஹோமம், ஜபம், த்யானம் செய்து 16 வகை உபசாரங்களும் செய்தாள்.
மண்டபத்தின் முன் அனேக வாத்தியங்கள் முழங்க வெண்பொங்கல், பால் அன்னம், சர்க்கரைப்பொங்கல், தயிரன்னம், மிளகன்னம், கடுகன்னம், எள்ளன்னம், குழம்பு வகைகள், கறிவகைகள், புட்டு மாவு, பொரி, சுண்டல், வெல்லம், பச்சரிசி, வறுத்த பருப்பு, எள்ளு, ஏலம், தேங்காய், சர்க்கரை, பயறு முதலியவற்றால் செய்த உருண்டை, பலவகை மோதகம், அப்பம், அடை, வடை, லட்டு, பணியாரம், தேன்குழல், முறுக்கு, வெள்ளரிக்காய், பலாபழம், மாங்கனி, வாழைப்பழம், நெய், பால், தேன், மோர், தயிர், இளநீர், கரும்புச்சாறு, இவைகளை மந்திரப் பூர்வமாக நிவேதனம் செய்தாள்.
சந்தனம், அகில், கருங்காலி, அரச்சுனம், வில்வம் என்னும் பஞ்ச தூபங்களும் கொடுத்து, கும்ப தீபம் முதலான பல தீபங்கள் காட்டி, குடை, கண்ணாடி, சாமரம், விசிறி, கொடி, ஆலவட்டம் முதலியவைகளை உபசாரமாக காட்டினாள். பலவித இசைகள் இசைக்க வாத்தியங்கள் முழங்க நர்த்தனம் செய்யப்பட்டது. கற்பூர ஆரத்தி எடுத்து, ப்ரதக்ஷிண நமஸ்காரம், உத்தர ந்யாஸங்கள் செய்தாள்.
இவ்வாறாக உமாதேவி 30 நாட்கள் விரதம் இருந்து, கண் விழித்து விநாயகரைப் பூஜித்தாள். முப்பத்தி ஒன்றாம் நாளன்று பலவகையான தானங்களுடன் சொர்ண மூர்த்தியை கும்பத்துடன் பூஜை செய்வித்த ஆசாரியருக்கு தக்ஷணையுடன் அளித்தாள். அதிதி, பரதேசி ஆகியோருக்கு அன்னதானம் அளித்தாள். பிருதிவி மூர்த்தியை புனர்பூஜை செய்து, மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியில் கரைத்தாள். இவ்வாறு ஜகன்மாதாவான உமாதேவி விக்னேச்வர விரத பூஜை செய்து தக்ஷிணாமூர்த்தியின் மறு உருவான சிவனை மணந்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஸித்திவிநாயக விரத பூஜா மஹிமையை பார்கவ புராணமாகிய கணேச புராணத்தில் விரிவாகக் காணலாம். க்ருஷ்ணர் இந்த விரதத்தை அனுஷ்டித்து சியமந்தகமணியை அபஹரித்த அபவாதத்திலிருந்து மீண்டார். மற்றும் பஞ்ச பாண்டவர்கள் அனுஷ்டித்து தாம் இழந்த அதிகாரத்தையும் நாட்டையும் திரும்ப பெற்றனர். பல ரிஷிகளாலும் தேவர்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இந்த ஸித்தி விநாயக பூஜையை செய்பவர்கள் அனைத்து பயன்களையும் அடைவர் என்பது திண்ணம்.
இம்மையில் இன்பமும் மறுமையில் பேரானந்தமும் அடைய முழுமுதற் கடவுள் விநாயகரை முறைப்படி வணங்க வேண்டும் என்று உலகை ஆளும் ஜகன்மாதா உபதேசித்ததை வியாச முனிவர் ஸூதமுனிவருக்கு கூற, அவர் ப்ருகு முனிவருக்கு உபதேசிக்க, ப்ருகு முனிவர் இவற்றை ‘உபாஸனா, லீலா’ என்ற இரண்டு காண்டமாக ஸம்ஸ்க்ருதத்தில் எழுதி கர்த்தமன் என்ற அரசன் மூலம் உலகுக்கு வழங்கியிருக்கிறார். எனவே பார்கவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் விநாயக விரத பூஜை மஹிமையை கேட்பவர்களும், படிப்பவர்களும் ஸகல நன்மைகளையும் அடைவர் என்பது திண்ணம்.
ராஜா கர்த்தமன், நளன், முருகன், மன்மதன் (உருவம் பெற்றான்), ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் பலர் இத்தகைய விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.



கருத்துகள் இல்லை