மஹா மாரியம்மன் - கோயம்புத்தூர் - அருள்மிகு மாரியம்மன்
மஹா மாரியம்மன்
கோயம்புத்தூர் - அருள்மிகு மாரியம்மன்
ஊரின் வடஎல்லையில் குதிரையாறும், அமராவதி ஆறும் சேரும் இடத்திற்கு அருகில் மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. அம்பாள் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து ஊரைக் காப்பதால் 'கோட்டைமாரி’ எனப்படுகிறாள்.
அம்மை நோய், கண்நோய் தீர, குடும்பம் செழிக்க வேண்டலாம். கண்நோய் கண்டவர்கள், இங்கு தரப்படும் தீர்த்தத்தை கண்ணில் விட்டுக் கொள்கிறார்கள்.
கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி சுயம்புவாக அருளும் மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிேஶகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.
புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதனை கரையில் போட்டுவிட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல்லே வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்து கொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார்.
அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான்தான்’ என்றாள். மீனவர் இத் தகவலை ஊர் மக்களிடம் கூறினார். மக்கள் அனைவரும் ஆற்றங் கரையில் கல்லை தேடியபோது கிடைக்கவில்லை.
ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப் பட்டிருந்ததைக்கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை