மஹா மாரியம்மன் - தாய்லாந்து மாரியம்மன்
மஹா மாரியம்மன்
தாய்லாந்து மாரியம்மன்
தமிழகம் தெய்வீகத் திருக்கோவில்கள் நிறைந்த புண்ணிய பூமி. கோவில்கள் சமுதாய, சமய பண்பாட்டு மையங்களாகவே திகழ்கின்றன. எல்லை தெய்வம் அல்லது கிராமதேவதையால் காக்கப்படாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை.
மாரியம்மன் கோவில் இல்லாத கிராமமே கிடையாது. மாரியம்மனுக்கும் கிராம மக்களுக்கும் இருக்கும் உறவு தாய், மகள் என உறவோடு பார்க்கும் உன்னத பக்தி உறவு அது. ஊர் மக்களைக் காப்பதால் இவள் ஊரையே ஸ்வீகாரம் செய்து கொள்கிறாள்.
மழை வேண்டி வெம்மைக் காலத்தில் மக்கள் பிரார்த்தித்ததால் கருணை வடிவான அம்மன் மனம் இறங்கி மாரியைப் பொழியச் செய்தாள். மாரியம்மன் ஆனாள்.
நம் ஊர் கதைகளிலிருந்து வேறுபட்ட ஒரு பார்வை. இதில் ப்ருகு முனிவரின் மனைவி நாகவல்லியின் அழகையும், கற்பையும் போற்றாதவரே இல்லை. இந்த உண்மையை சோதிக்க மும்மூர்த்திகள் வந்தனர். நாகவல்லிக்கு அவர்களைத் தெரியவில்லை. மூவரையும் குழந்தையாக மாற்றினாள். சினமுற்ற மும்மூர்த்திகள் அவளை சபித்தனர்.
நாகவல்லியின் அழகிய முகம் முழுவதும் அம்மைத் தழும்புகள் தோன்றின. வெளியே சென்று திரும்பிய ப்ருகு முனிவர் நடந்ததை அறிந்து அடுத்த ஜென்மத்தில் நீ அசூரியாகப் பிறப்பாய் என்று சபித்தார். மனம் வருந்திய நாகவல்லியிடம் மக்கள் அந்நோயிலிருந்து விடுபட உன்னையே வணங்கி வழிபடுவர் என கூறினர். முகம் மாறிய நாகவல்லியே மாரி அம்மன் ஆனாள். சிலோம் ரோடு சாலையில் தமிழ்க் கோவில் அமைப்பில், ஆங்கிலம் அதிகம் பேசாமல் தாய்மொழி பேசும் ஊரில் மாரியம்மன் கோவில் அதி அற்புதமாக அமைந்துள்ளது. இந்த தாய் மக்கள் பூ கட்டி கொடுக்கும் அழகே அலாதிதான். மணப்பெண் ஜடைபோல அமைந்திருக்கும் மாரியம்மன். இங்கு உமாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.
யாதவ சமூகவழி வந்த தலைமுறையினரே இன்றும் கோவிலை நிர்வகிக்கின்றனர். துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் வடிவாக மகாமாரியம்மன் இங்கு வழிபடப்படுகிறாள். திரிசூலம் ஏந்திய அம்மனைப் பார்த்ததும் பறந்தோடும் துன்பம்.
இத்திருக்கோவிலில் கந்தன், காசி விஸ்வநாதர், கணபதி, கிருஶ்ணர், விஶ்ணு, காளி, பேச்சியம்மன் மற்றும் புத்தருக்கும் சந்நதி உண்டு.
கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதுவது மற்றும் தமிழில் செய்யப்படும் அர்ச்சனை அனைத்தும் மிக இனிமை. நவராத்திரி உற்சவம் மிக சிறப்பு. காவடி, அலகு குத்துதல் தேர் தூக்கல் என மாரியம்மன் கோவில் அனைத்து நிகழ்ச்சிகளும் இங்கு நடை பெறுகிறது.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை