மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - பிரம்மோற்சவம்
மஹா மாரியம்மன்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில சிறப்பான வழிபாட்டு முறைகள் உள்ளன. அபிேஶகம், அர்ச்சனை, நிவேதனம், தீபாராதனை போன்ற வழிபாட்டு முறைகள் எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை. இவை தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் சில சிறப்பான வழிபாடுகள் உண்டு. இந்த வழிபாட்டு முறைகளில் பலவும் குறிப்பிட்ட செயல் நடைபெற வேண்டி அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப் படுவதாகும். சில வழிபாடுகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தினத்தில் பெருவிழாவாக செய்யப்படுவதாகும். இதுவே பிரம்மோற்சவம் என்றழைக்கப்படுகிறது.
காப்பு கட்டுதல்
வருடந்தோறும் நடைபெறும் பெருவிழாவையொட்டி அது ஆரம்பிப்பதற்கு முன் இந்நிகழ்ச்சி நடைபெறும். காப்பு கட்டுதல் என்றால் உறுதி எடுத்தல் என்று பெயர். எதற்கு உறுதி? கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, ஊரே திரண்டு வந்து அவ்விழாவில் பங்கு கொள்ளும். அவ்வாறு அதிக மக்கள் கூடும் பொழுது, சிற்சில அசம்பாவிதங்கள் நடைபெறலாம். திருக்கோயிலில் நடைபெறும் திருவிழா எந்தவொரு தடங்கலும் இல்லாமல், எல்லா மக்களும் பக்தி உணர்வுடன் அதில் ஈடுபட்டு நல்ல முறையில் நிறைவடைய வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள்வதே காப்பு கட்டுதல் என்ற நிகழ்ச்சியாகும்.
இந்த காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் மஞ்சள் நூலையோ அல்லது மஞ்சள் சேர்த்து கட்டப்பட்ட நூலையோ மாரியம்மன் முன் வைத்து ஆராதனைகள் செய்துவிட்டு முதலில் ஒரு நூலை அம்மன் கையில் கட்டுவர். பின்னர் பரிவார தேவதைகளுக்கும் கட்டுவர். பின்னர் பூசாரி தன் கையில் கட்டிக்கொள்வார். விழாவில் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும் கட்டிக்கொள்வர்.
காப்பு கட்டி விட்டால், பின்னர் அந்த ஊரிலிருந்து எவரும் வெளியில் செல்ல மாட்டார்கள். அவ்வாறு அவசரமாக செல்ல நேர்ந்தால் வெளியிடங்களில் இராத்தங்காமல் உடனே திரும்பிவிடுவர். அதே போல் காப்பு கட்டி விட்டால் அவ்வூருக்குச் செல்லும் எவரும் அவ்வூரில் இரவு தங்கமாட்டார்கள். பெரும்பாலும் அவ்வூருக்குச் செல்வதை தவிர்ப்பர்.
இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. இத்தகைய விழாக்களில் முன் காலத்தில் அவ்வூர் மக்கள் மட்டுமே பங்கேற்பர். ஊர் கட்டுப்பாடு என்ற முறையில் தங்களுக்குள் பணம் வசூல் செய்து விழாவை நடத்துவர்.
விழாக் காலங்களில் பெரும் கூட்டம் கூடும்பொழுது வேற்று ஊர்களிலிருந்து மனிதர்கள் வரும் பக்ஷத்தில் அவர்கள் மூலம் தொற்று நோய்கள் பரவலாம். இதனால் அந்த கிராமத்தின் நிம்மதி குலையும். இதனைக் கருத்தில் கொண்டே ிிகாப்பு கட்டுதல்சு நிகழ்ச்சி, விழா துவங்கு முன் நடைபெறுகிறது. காப்பு கட்டும் நிகழ்ச்சி நிறைவுற்றதிலிருந்து திருவிழாவிற்கான அடுத்தடுத்த வேலைகள் அடுத்தடுத்து நடைபெறும்.
கொடியேற்றுதல்
திருக்கோயிலில் திருவிழா துவங்கிவிட்டதை எல்லோருக்கும் அறிவிக்கும் நிகழ்ச்சியே கொடியேற்றுதலாகும். பொதுவாக கொடியானது மஞ்சள் துணியில் தயாரிக்கப்படும். கொடியேற்ற நாளன்று புதிய கொடி கம்பம் கொண்டுவந்து அதை சுத்தப்படுத்தி மஞ்சள் குங்குமம் சந்தனம் இட்டு, வேப்பிலையால் அலங்கரித்து அதன் மேல் நுனியில் கொடியை கட்டி விடுவர். பின்னர் அம்மனுக்கு பூஜை செய்து விட்டு, கொடிகம்பத்தை குழி தோண்டி அதில் நடுவர். கொடி கம்பம் சுமார் 60 அடி வரை கூட இருக்கும். சில கோயில்களில் நிலையான கொடிமரம் இருக்கும்.
காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு விசேஶ அபிேஶகங்களும், ஆராதனைகளும் இடம் பெறும். மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் கூட இடம் பெறும். தினமும் அம்மன் அலங்கரிக் கப்பட்டு வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவதுண்டு. சில ஊர்களில் பல கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே அம்மன் இருக்கும். அவ்வாறாயின், அம்மன் அந்த விழா காலத்தில் தனக்குட்பட்ட எல்லா ஊர்களுக்கும் சென்று திரும்புவார். இவ்வாறு பல நாட்கள் நடைபெறும் பெருவிழாவின் முடிவு நாளன்று கூழ் காய்ச்சி ஊற்றுதல் தீமிதி போன்ற விழாக்களும் நடைபெறும்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை